ஆராரோ ஆரிராரோ
என் கண் மணியே கண்ணுறங்கு.
பத்துத் திங்கள் என்னக்குள் வாழ்ந்த
என் உயிரே நீயுறங்கு.
உயிருக்குள் பொத்தி வைத்த
உணர்வெல்லாம் நீதானே என் நினைவே நீயுறங்கு.
அம்மா என்ற சொல்லில் என் வாழ்விற்கு
அர்த்தம் தந்த உணர்வே நீயுறங்கு.
நீ காணும் கனவெல்லாம்
நினைவாகக் காத்திருப்பேன் வாழ்வே --நீயுறங்கு.
உதிரத்தைப் பாலாய் உரமாக
ஊட்டிடுவேன் உறுதி பெற்று நீயுறங்கு.
ஏழ்மையிலே வாழ்ந்தாலும்
ஏற்றிடுவேன் உன் வாழ்வை என் செல்வமே நீயுறங்கு.
வறுமை வந்து வாட்டினாலும் பொறுமை நான் காத்திடுவேன் என் சொத்தே நீயுறங்கு.
நோய் வந்து தாக்கினாலும்
நோகாமல் உனை காப்பேன் என் தெய்வமே நீயுறங்கு.
ஊர் போற்றும் உத்தமனாய்
உண்மையாய் வாழ்ந்திடனும் என் வாழ்வே நீயுறங்கு.
பார் போற்றும் அறிவாலே
பக்குவமாய் வாழ்ந்திடனும்
என் தவமே நீயுறங்கு.
தமிழ் போற்றி தரணியிலே
அற்புதமாய் மிளிர்ந்திடனும்
வைரமே நீயுறங்கு.
ஆக்கம்
குமுதினி ரமணன் யேர்மனி:
0 கருத்துகள்:
கருத்துரையிடுக