ஞாயிறு, 1 மே, 2016

Tagged Under:

கவிமகன்.இ எழுதிய நாமும் மனிதரே...!

By: Unknown On: AM 8:33
  • Share The Gag


  • வானம் முழுக்க மழை மேகம்
    நிலம் நிறைந்த ஈரம் - ஆனால்
    நாங்கள் நா நானைக்க 
    நீரின்றி கிடக்கிறோம்

    தேன் குடிக்கும் ஈக்கள் கூட்டம்
    ஊர் முழுக்க மொய்த்து கிடக்க
    உயிர் வாழ தீனி கேட்டு - உரிமைக்காய்
    இரைஞ்சி கிடக்கிறோம்
    எங்கள் கரங்கள் தேய்ந்து
    என்புகள் பாழடைந்து
    தேகமே புண்ணாக்கப்பட்டு - சாவுக்காய்
    தேம்பிக் கிடக்கிறோம்
    எங்கள் வீட்டு கூரைகளில்
    ஊடுருவும் நட்சத்திரங்கள் கூட
    வெளிப்பற்று இருட்டுக்குள் - ஒளிக்காய்
    துடிப்பற்று கிடக்கின்றோம்
    எங்கள் இதயங்கள்
    இரும்புகளால் இணைக்கப்பட்டு
    மின் மெழுகால் முலாம் - பூசி
    நிமிர்ந்த ரோபோக்களல்ல
    உங்களால் திருகப்படும்
    திசைகளில் ஆட நாமெல்லாம்
    சுருள்கள் நிறைந்த - உங்க
    சிறுமி விளையாட்டு பொம்மைகளல்ல
    வெடித்த கொப்பளங்கள்
    வடிக்கும் சீள்கள் குடித்து
    ஏப்பமிடும் உங்கள் சுரண்டல் -பசிக்கு
    இத்தாலிய பிக்‌ஷாக்களல்ல
    உங்களைத் தான் கேட்கிறோம்
    நாங்கள் நடந்த பாதைகளில்
    புற்களை வளர்த்து சிரிக்கும் - உங்கள்
    கொடூரங்களை விட்டுவிடுங்கள்
    லெனின் கண்ட கனவின்
    உடைசல்களையாவது எங்கள்
    வலிகள் மாற்றும் - புது
    மருந்தாக மாற்றுங்கள்
    வாழ விடுங்கள் எங்கள்
    உடலை உண்டு விட்டு
    கருகிய கரை என - உங்கள்
    வீட்டு தங்க குப்பை கூடையில் வீசாதீர்
    உயிருள்ள, உரிமையுள்ள,
    உணர்வுள்ள மானிடர் நாம்
    எம்முடல் நரம்புகளால் - நன்று
    கட்டப்பட்ட இரத்த கூடு.
    நெடிய வளர்ந்த மரங்களின்
    வேர்களிடையே நாங்கள் பதுங்க
    ஆசை கொள்ளவில்லை - உமைபோல்
    நாமும் துளிர்க்க விரும்புகிறோம்
    படர்ந்து பரந்து சூரிய ஒளியை
    எம்மிடமிருந்து பறித்து எம்மை
    முடக்கி விடாது முயல விடுங்கள் - நாம்
    முளைவிட்டு நிமிர்கிறோம்
    எங்கள் மீது பூசப்பட்ட முதலாளித்துவ
    சேற்றை கழுவ விடுங்கள்
    நாங்கள் நாங்களாகவே - நிமிர்ந்து
    மனிதர்களாக வாழ்கிறோம்
    இன்னும் ஒரு மே வரும் உம்மிடம் உரிமை கேட்கும் நாள் பிறக்கும்
    அமைதியாய் ஓர் நாள் விடுப்பு - அனுமதி
    தந்து சம்பளத்தை புடுங்கி கொள்வீர்.
    மறுநாள் எம்மில் ஊறும் - தேன்
    குடிக்க காத்திருபீர்
    நாமும் ஊற்றெடுக்கும் வியர்வையை
    துகிலுரித்து குருதி சிந்தி கிடப்போம்
    நீங்கள் மலர்ந்து காய்த்து பழமாகி
    விதையாகி மீண்டும் முளைத்து....
    எங்கள் ஈரத்தை உறிஞ்சி - உச்சமாய்
    நெடிந்துயர்ந்து செல்வீர்கள்.
    நாங்கள் எங்கள் வியர்வையை
    பரிசாக்கி காய்ந்த கரங்களின்
    புண்களுக்கு மருந்தாக எங்கள்
    மண்ணை பற்றி கொள்வோம்...
    ************************************

     ஆக்கம்  இரத்தினம்கவிமகன் k a

    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக